வேலூர்: ‘ஆபரேஷன் சிந்தூரை’ வரவேற்கும் விதமாக வேலூர் சித்திரை திருவிழாவில் ஜெட் விமானம் வடிவமைத்து அதனை பல்லக்கில் வைத்து இளைஞர்கள் பவனி வந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் சித்திரை திருவிழா, பௌர்ணமி தினத்தன்று ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி பூப்பல்லக்கு விழா இன்று (மே 13) அதிகாலை தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் ஜலகண்டீஸ்வரர், செல்வ விநாயகர், தாரகேஸ்வரர், விஷ்ணு துர்கை, பெருமாள், கனதுர்கை அம்மன், வேம்புலி அம்மன், லஷ்மி நரசிம்மர் சாமி ஆகிய 8 கோயில் சாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்குகளில் பவனி வந்தன.
இதில் முக்கிய அம்சமாக, பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பேரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. 'ஆபரேஷன் சிந்தூரை’ வரவேற்கும் வகையில், வேலூர் சித்திரை திருவிழாவில் வடிவமைக்கப்பட்ட ஜெட் விமானத்தின் மாதிரி பல்லக்கின் மேல் பகுதியில் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்த திருவிழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.